மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம், சென்ற ஜனவரி மாதத்தில், கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதத்துடன் (7.31 சதவீதம்) ஒப்பிடும்போது இது 1.25 சதவீதம் அதிகமாகும்.
சர்க்கரை
சென்ற கரீஃப் பருவத்தில், தென் மேற்கு பருவமழை கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. இதனால், சர்க்கரை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில், நாட்டின் அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்து இருந்தது. சென்ற ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் இதையும் விஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், சர்க்கரை விலை, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 58.96 சதவீதம் உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளின் விலை இதே காலத்தில் முறையே 53.3 சதவீதம், 45.64 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஒரு மாதத்தில், துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் விலை முறையே 6 சதவீதம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூ.36,000 கோடி
உணவு பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தியது. இதனால், வங்கிகள் கூடுதலாக ரூ.36,000 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால், இந்த அளவிற்கு நாட்டில் பணப்புழக்கம் குறைந்துவிடும்.
தற்போது பணவீக்க விகிதம் மிகவும் உயர்ந்துள்ளதால், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), மற்றும் வங்கிகள் அவற்றின் உபரி நிதியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைப்பதற்காக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனிற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெட்ரோல்
பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் போது, 2 தொகுதிகளில் மட்டும்
இடைத்தேர்தல் ஏன்?
-
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு
தொகுதி உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ள நிலையி...
1 நாள் முன்பு